சந்திரனை சுற்றி வரும் தென்கொரியாவின் முதல் விண்கலமான தனூரி, பூமி மற்றும் நிலவின் கருப்பு வெள்ளை புகைப்படங்களை பகிர்ந்துள்ளது.
தனூரி என்ற கொரிய மொழி சொல், நிலவு மற்றும் கொண்டாட்டம் என்று பொருள்படும் இரு கொரிய மொழி சொற்களின் இணைப்பாகும். இது கடந்த ஆகஸ்ட் மாதத்தில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. கடந்த மாதத்தில், இது நிலவின் சுற்றுவட்ட பாதைக்குள் நுழைந்தது. இந்நிலையில், டிசம்பர் 24 ஆம் தேதி முதல் ஜனவரி 1ம் தேதி வரை எடுக்கப்பட்ட புகைப்படங்களை கொரியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு தனூரி அனுப்பியுள்ளது.
தனூரி விண்கலத்தின் நிலவு ஆராய்ச்சிகள் தொடங்கப்பட உள்ள நிலையில், இந்த நிகழ்வு வரலாற்று தருணம் என்று தென்கொரிய அதிபர் யூன் சூக் இயோல் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும், நிலவில் தரையிறங்கக்கூடிய விண்கலத் திட்டத்தை வரும் 2032 ஆம் ஆண்டிலும், செவ்வாய் கிரக விண்கலத் திட்டத்தை வரும் 2045 ஆம் ஆண்டிலும் செயல்படுத்த தென்கொரியா திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.