கடந்த 2 வாரங்களாக, அமெரிக்கா, தென்கொரியா மற்றும் ஜப்பான் நாடுகள் இணைந்து, ராணுவ ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றன. அதனை எதிர்த்து, வடகொரியா ஏவுகணை சோதனைகளை தீவிரப்படுத்தியது. வடகொரியாவின் நடவடிக்கைக்கு பதிலடியாக, ராணுவ ஒத்திகை தொடர்ந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. திங்கட்கிழமை, 3 நாடுகளின் கடற்படையும் இணைந்து ஏவுகணை பாதுகாப்பு ராணுவ ஒத்திகையில் ஈடுபட்டன.
கொரியா மற்றும் ஜப்பான் இடையிலான சர்வதேச கடல் பகுதியில் இந்த ஒத்திகை நடைபெற்றது. இதில், தென்கொரியாவின் 7600 டன் எடையுள்ள ஏவுகணை தடுப்பான், அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாடுகளின் ஏவுகணை தடுப்பான் ஆகியவை பயன்படுத்தப்பட்டன. ரேடார் துணையுடன் தகவல் தொடர்பு ஏற்படுத்தி, ஏவுகணை இருப்பதாக குறிக்கப்படும் மெய்நிகர் இடத்தை நோக்கி 3 நாட்டு கடற்படைகளும் தாக்குதல் நடத்தின. வடகொரியாவின் ஏவுகணைகளை அழிக்கும் நோக்கத்தில் இந்த ஒத்திகை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.