2023 ஆம் ஆண்டு, முதல் முறையாக, நேற்று விண்வெளி நடை பயணம் மேற்கொள்ளப்பட்டது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து, நாசாவைச் சேர்ந்த நிக்கோல் மான் மற்றும் ஜப்பான் விண்வெளி மையத்தைச் சேர்ந்த கோய்ச்சி வாகடா ஆகியோர் இந்த விண்வெளி நடைப்பயணத்தை மேற்கொண்டனர். இவர்கள் இருவரும் கடந்த அக்டோபர் மாதத்தில் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் விண்வெளிக்கு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று காலை 8:15 மணிக்கு தொடங்கி சுமார் 6.5 மணி நேரத்திற்கு விண்வெளி நடை பயணம் மேற்கொள்ளப்பட்டது. அத்துடன், இந்த நடைபயணம் குறித்த காணொளி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் சில தொழில்நுட்ப அடிப்படையிலான வேலைகளை செய்வதற்காக இந்த நடை பயணம் மேற்கொள்ளப்பட்டது. இனி வரும் நாட்களில், விண்வெளி நிலையத்தில் சோலார் பேனல்களை அமைப்பதற்காக, விண்வெளி நடை பயணங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.