நாசா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்கள் இணைந்து க்ரூ 6 விண்வெளி திட்டத்தை செயல்படுத்த இருந்தன. கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கான் 9 ராக்கெட் மூலம், 4 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்பட இருந்தனர். ஆனால், கடைசி நிமிடத்தில், இன்ஜினில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த திட்டம் ரத்து செய்யப்பட்டது. அதன் பின்னர், கோளாறு சரி செய்யப்பட்டு, இன்று வெற்றிகரமாக பால்கான் 9 ராக்கெட் விண்வெளிக்கு சென்றுள்ளது.
நாசாவைச் சேர்ந்த 2 விஞ்ஞானிகள், ஒரு ரஷ்ய விண்வெளி வீரர் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த ஒரு விண்வெளி வீராங்கனை ஆகியோர் பால்கான் 9 ராக்கெட் மூலம் விண்வெளிக்கு சென்றுள்ளனர். இந்த நிகழ்வை நாசா நேரடியாக ஒளிபரப்பு செய்தது. ராக்கெட் ஏவப்பட்டு சரியாக 9 நிமிடங்களுக்கு பின்னர், க்ரூ டிராகன் கலம் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இது ஒலியை விட 20 மடங்கு வேகத்தில் பூமியிலிருந்து பயணித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது சுற்றுவட்டப் பாதையில் உள்ள இந்த கலம், பூமியிலிருந்து 420 கிலோமீட்டர் உயரத்தில், பூமியைச் சுற்றி வரும் சர்வதேச விண்வெளி நிலையத்தை 25 மணி நேரத்தில் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.