ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் உலகின் சக்தி வாய்ந்த ஸ்டார்ஷிப் ராக்கெட் சோதனையை மூன்றாம் முறையாக நிகழ்த்தியுள்ளது. மூன்றாம் கட்ட சோதனை வெற்றிகரமாக அமைந்துள்ளது. எனினும், ஸ்டார்ஷிப் ராக்கெட் விண்வெளிக்கு சென்றுவிட்டு மீண்டும் பூமிக்குள் நுழையும் போது தொலைந்து போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டார்ஷிப் பரிசோதனை முதல் 2 முறை தோல்வியில் முடிந்தது. மூன்றாம் கட்ட பரிசோதனை நேற்று நடைபெற்றது. இந்த சோதனையின் போது, விண்வெளியில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை, கணிக்கப்பட்ட சரியான நேரத்தில் ஸ்டார்ஷிப் ராக்கெட் சென்றடைந்தது. இலக்கை தொட்ட பிறகு இந்திய பெருங்கடலுக்குள் தரை இறங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், விண்வெளியில் இருந்து பூமிக்குள் நுழைந்த போது, ஸ்டார்ஷிப் ராக்கெட் உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் ராக்கெட்டின் கீழ்நிலை பூஸ்டர் கடலில் தரையிறங்கும் கட்டம் தோல்வியில் முடிந்தது. ராக்கெட் வளிமண்டலத்திற்குள் வேகமாக நுழையும் காணொளி இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. ராக்கெட் தொலைந்து போனாலும், இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்தது என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த சோதனையின் போது ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் பல்வேறு கட்ட நோக்கங்களை பூர்த்தி செய்ய முடிந்ததாக கூறியுள்ளது. ஸ்பேஸ் நிறுவனத்தின் இந்த சாதனைக்கு நாசா பாராட்டு தெரிவித்துள்ளது.