ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் புளோரிடாவின் கேப் கனாவரல் விண்வெளி நிலையத்திலிருந்து 23 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை அக்டோபர் 23 அன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. அக்டோபர் 22 அன்று திட்டமிடப்பட்டிருந்த இந்த ஏவுதல், மோசமான வானிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஸ்பேஸ் எக்ஸின் நம்பகமான ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன. ராக்கெட்டின் முதல் நிலை, அட்லாண்டிக் பெருங்கடலில் நிறுத்தப்பட்டிருந்த "எ ஷார்ட்ஃபால் ஆஃப் கிராவிடாஸ்" என்ற ட்ரோன் கப்பலில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இது இந்த ராக்கெட்டின் 18வது ஏவுதல் மற்றும் தரையிறக்கம் ஆகும். விண்ணில் செலுத்தப்பட்ட ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள், ஏவுதலுக்கு 65 நிமிடங்களுக்குப் பிறகு குறைந்த புவி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டன. தற்போதைய நிலவரப்படி, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் 6,400-க்கும் மேற்பட்ட ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது. மேலும், 2024 ஆம் ஆண்டு மட்டும் 99 முறை ஃபால்கன் 9 ராக்கெட்டை விண்ணில் செலுத்தி சாதனை படைத்துள்ளது.