கேரளாவில் தண்ணீர் இருப்பு மற்றும் நுகர்வு குறித்த சிறப்பு பட்ஜெட் தயாரிக்கப்படுவதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், கேரளாவில் 44 ஆறுகள், உப்பங்கழிகள், ஓடைகள், நீர்நிலைகள் உள்ளன. இருந்தபோதிலும் பருவநிலை மாற்றம், புவி வெப்பமடைதல் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. கோடை காலத்தில் இந்த பற்றாக்குறை மிக அதிகமாக இருக்கிறது. எனவே மக்களின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க, இது தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த கேரளாவில் தண்ணீர் பட்ஜெட் தயாரிக்கப்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதன் மக்கள் தொகை அடிப்படையில் பெறப்படும் தண்ணீரின் அளவு நீர் பட்ஜெட்டில் இடம்பெறும்.
நீர்வள மேம்பாட்டு மேலாண்மை மையத்தின் உதவியுடன், மாநில நீர்வள துறையின் பிரதிநிதிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையின் நிபுணர்கள் அடங்கிய குழுவினரால் தண்ணீர் பட்ஜெட் தயாரிக்கப்படும். இந்தியாவிலேயே கேரளாவில் தான் நீர் மேலாண்மைக்காக இதுபோன்ற பட்ஜெட் தயாரிக்கப்படுகிறது. இதன்மூலம் ஆறுகள் சீரமைப்பு, கால்வாய்கள் புனரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.