மின்இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
முன்பாக மின்இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்தது. இந்தநிலையில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது, 'தமிழகம் முழுவதும் விரைவில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதை மின் இணைப்பு பெயர்மாற்றம், ஆதார் எண்ணை இணைக்க பயன்படுத்திக்கொள்ளலாம். இதற்காக கால அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது. கட்டாயம் 100 சதவீதம் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம். ஆதார் எண்ணை இணைத்தால்தான் மின் துறையை சீர்திருத்தம் செய்து புதிய பரிணாமத்தோடு மேம்படுத்த முடியும் என்றார்.
மேலும் இதுகுறித்து மின்சார வாரிய அதிகாரிகள் கூறும்போது, பொதுமக்கள் தங்கள் ஆதார் அட்டை நகலை எடுத்துச் சென்று மின்சார கட்டணம் செலுத்தும் போதே ஆதார் எண்ணை இணைக்க ஆதார் அட்டை நகலை கொடுத்தால் உடனே இணைத்து தருகிறார்கள். எனவே உடனடியாக பொதுமக்கள் தங்களுடைய ஆதார் எண்ணுடன், மின்சார இணைப்பு எண்ணை இணைக்க வேண்டும். தற்போது மின்சார வாரிய அலுவலகங்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால் 2 நாட்கள் காலஅவகாசமும் வழங்கப்பட்டு உள்ளது. அதேநேரம், அடுக்கு மாடி குடியிருப்புகளில் பொதுபயன்பாட்டு பகுதிகளில் உள்ள மின்சார சாதனங்கள் பயன்பாட்டுக்கு தனியாக மின்சார இணைப்பு பெற்றிருந்தால், அது பொது பயன்பாட்டுக்குள் வரும். மானியம் இல்லாமல் முழுத்தொகை செலுத்தப்படுவதால் அதற்கு ஆதார் எண் இணைக்க தேவையில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர். அதோடு மின்கட்டணம் செலுத்த மேலும் 2 நாள் அவகாசம் வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.