பட்ஜெட் விமான போக்குவரத்து சேவை வழங்கும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம், அடுத்த வாரத்தில், இந்திய அரசின், அவசரக் கடன் வரி உத்தரவாதத் திட்டத்தின் கீழ் 225 கோடி ரூபாய் பெறுகிறது.
ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் பெயரில் நிலுவையில் உள்ள கடன்கள் மற்றும் குத்தகை கட்டணங்கள் போன்றவற்றுக்காக அரசின் அவசர கால நிதி உத்தரவாதம் வழங்கப்படுவதாக ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. அரசின் அவசரக் கடன் வரி உத்தரவாதத் திட்டத்தின் கீழ், 280 கோடி ரூபாய் நிதி பெறுவதற்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் விண்ணப்பித்திருந்ததாகவும், தற்போது 225 கோடி ரூபாய் பணம் அளிப்பதற்கு அரசாங்கம் உத்தரவாதம் வழங்கி உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. கொரோனா பெருந்தொற்றின் காரணமாக, நலிவடைந்த பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு, கடன்கள் வழங்குவதில், வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு உத்தரவாதம் தரும் வகையில் மத்திய அரசு இந்த திட்டத்தை 2020 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம், வரும் வாரத்தில், ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திற்கு நிதி கிடைக்கவுள்ளது. இந்நிலையில், நிறுவனத்தின் வருவாய் 2000 கோடி ரூபாய் வரை அதிகரிக்கக்கூடும் என்று அந்நிறுவனத்தின் தலைவர் அஜய் சிங் தெரிவித்துள்ளார். மேலும், நிறுவனம் கூடுதலாக ஏழு போயிங் விமானங்களைப் பெற உள்ளதாகவும், அதன் மூலம் வருவாய் மேலும் அதிகரிக்கும் என்று கூறினார். ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தில், அஜய் சிங்கிற்கு 60% பங்குகள் உள்ளன. அதில் 44.24% பங்குகள் மீது அவர் கடன் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.














