இலங்கையில் கடந்த ஜனவரியில் சுற்றுலாத்துறை 122 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது என்று அந்நாட்டு நிதித்துறை இணை அமைச்சர் ரஞ்சித் சியம்பலபிட்டிய தெரிவித்துள்ளார்.
இது கடந்த ஆண்டு ஜனவரியுடன் ஒப்பிடுகையில் 122 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது. இது குறித்து நிதித்துறை இணை அமைச்சர் ரஞ்சித் கூறியதாவது, இலங்கை சுற்றுலாத்துறை 342 மில்லியன் டாலர் வருவாயை ஈட்டி உள்ளது. இதனால் சுற்றுலாத்துறை 122 சதவீத அளவுக்கு வளர்ச்சி அடைந்தது தெரியவந்துள்ளது. பொருளாதார நெருக்கடி காலத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு இலங்கை ரூபாய் மதிப்பு சரிந்து இருந்தது. அப்படி இருக்கும்போது நிகழ் ஆண்டு ஜனவரியில் ரூபாய் மதிப்பு 14.6% அதிகரித்துள்ளது. நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு கடந்த ஆண்டு ஜனவரியில் 2.1 பில்லியன் டாலராக இருந்தது. அது தற்போது நிகழாண்டு ஜனவரியில் 114 சதவீதம் அதிகரித்து 4.5 பில்லியன் டாலராக உள்ளது. நாட்டின் பொருளாதாரம் 2023 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது என்றார்.
முன்னதாக இலங்கை அரசு திவால் நிலையை அறிவித்திருந்தது. பின்பு சர்வதேச நிதியத்தின் கடன் உதவியுடன் பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை சிறுக மீண்டு வருகிறது.