இலங்கையில் இருந்து தமிழர்கள் வெளியேறி வருவதாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் மந்திரி தெரிவித்தார்.
இலங்கையில் கடந்த சில மாதங்களாக கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ், உணவு பொருட்கள், மருந்து பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.
இந்தநிலையில், இலங்கை வெளியுறவுத்துறை மந்திரி அலி சாப்ரி கூறியதாவது:- பொருளாதார சிக்கல் காரணமாக, இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து தமிழர்கள் வெளியேறி வருகிறார்கள். கடந்த 6 மாதங்களில், 302 தமிழர்கள் இந்தியா, வியட்நாம், உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு சென்று விட்டனர். வியட்நாம் சென்றவர்களில் 85 பேர், மீண்டும் இலங்கைக்கு திரும்பி வர சம்மதம் தெரிவித்துள்ளனர். அவர்கள் நாடு திரும்ப வெளியுறவுத்துறை அமைச்சகம் உதவும். வெளிநாடுகளில் அகதிகள் அந்தஸ்து கோருவதில் உள்ள ஆபத்துகள் குறித்து எடுத்துக்கூறி, ஆள்கடத்தல் கும்பலிடம் சிக்கிக் கொள்ளாதீர்கள் என்று தமிழர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் என்று அவர் பேசினார்.