ஜூலை 28ஆம் தேதி எஸ்.எஸ்.எல்.வி- டி3 ராக்கெட்டை விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
இஸ்ரோ சிறிய வகையிலான மைக்ரோ மற்றும் நேனோ வகை செயற்கைக்கோள்களை தயாரித்து பி.எஸ்.எல். வி ராக்கெட்டுகளில் பொருத்தி விண்ணில் ஏவி வந்தது. இதனால் அதிக பொருட்செலவு ஏற்பட்டதால் சிறிய செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் எஸ்.எஸ்.எல்.வி ரக ராக்கெட்டுகளை தயாரித்தது. இந்த ராக்கெட்டுகள் தொழில் துறை உற்பத்திக்காக அதிகம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இது வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்ய உதவுகிறது. மேலும் இவ்வகை ராக்கெட் மிகவும் குறைந்த செலவுடைய ராக்கெட் ஆகும். இதனை தேவைக்கு ஏற்ப தயாரிக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட் மூன்று நிலை கட்டமைப்புகளை கொண்டிருக்கும். இதன் மூன்று நிலைகளிலும் உந்து விசைக்காக திட எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது. இதன் முதல் எஸ்.எஸ்.எல்.வி- டி1 ராக்கெட் 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. ஆனால் இது அதன் நோக்கத்தை அடையவில்லை. அதனைத் தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.வி- டி2 ராக்கெட் வடிவமைக்கப்பட்டது. அது கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது மூன்றாவது ஆக எஸ்.எஸ்.எல்.வி- டி3 ராக்கெட்டை ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து வருகிற ஜூலை 28ஆம் தேதி விண்ணில் ஏவுவதற்கு இஸ்ரோ தயாராகி வருகிறது.