இந்திய விண்வெளித் துறையில் உள்ள மகத்தான வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு நாட்டில் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்களை பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
பிரதமர் மோடி நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் கூறியதாவது, 'சமீபத்தில் இஸ்ரோ 36 ஒன்வெப் செயற்கைக்கோள்களை எல்.வி.எம்3 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. உலக வர்த்தக (விண்வெளி) சந்தையில் இந்தியா ஒரு வலுவான வீரராக உருவெடுத்துள்ளது என்பதை ராக்கெட் ஏவுதல் சுட்டிக்காட்டுகிறது.
இதன் மூலம், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலும், கட்ச் முதல் கோஹிமா வரையிலும், நாடு முழுவதும், டிஜிட்டல் இணைப்பு மேலும் வலுப்பெறும். இதன் உதவியுடன், தொலைதூர பகுதிகள் கூட நாட்டின் பிற பகுதிகளுடன் எளிதாக இணைக்கப்படும். விண்வெளித் துறை இந்திய இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கிறது. அதனால் புரட்சிகரமான மாற்றங்கள் வரத் தொடங்கியுள்ளன என்றார்.
IN-SPACe விண்வெளி அமைப்பானது அரசு சாரா நிறுவனங்கள் தங்கள் செயற்கைக்கோள்களை ஏவுவதற்கான வசதிகளைப் பெறவும் உதவுகிறது. இந்தத் துறையில் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டுவருவதில் இந்தியத் தொழில்கள் மற்றும் ஸ்டார்ட்அப்கள் இப்போது ஈடுபட்டுள்ளன என்று அவர் மேலும் தெரிவித்தார்.