சட்டம் ஒழுங்கை பராமரிப்பது மாநில அரசுகளின் பொறுப்பு என்று உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ஹரியானா மாநிலம் சூரஜ் குண்டில் உள்துறை அமைச்சர்கள் மாநாடு நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு மாநில முதல்வர்கள் நேரடியாக கலந்து கொண்டிருக்கிறார்கள். இதைத்தொடர்ந்து இன்றைய தினம் டெல்லியில் இருந்து காணொளி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றி வருகிறார்.
அப்போது பேசிய அவர், சட்டம் ஒழுங்கு மாநிலங்களின் பொறுப்பு என்றும், இது நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். பல்வேறு சவால்களுக்கு மத்தியில் பண்டிகைகளின்போது நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்துவது மாநிலங்களின் கடமை ஆகும் . உள்நாட்டு பாதுகாப்பு விஷயங்களில் புதிய கொள்கைகளை உருவாக்கும் முயற்சியே இந்த சிந்தனை முகாம் என்றார்.
நாடு முன்னேறும் போது வளர்ச்சியின் பலன்கள் கடைசி நபருக்கும் சென்றடைவதை நாம் உறுதி செய்ய வேண்டும் என்றும், ஒவ்வொரு மாநிலங்களும் ஒன்றிணைந்து கற்றுக்கொண்டு நாட்டின் முன்னேற்றத்துக்காக செயல்படுவதே மக்களுக்கு நாம் ஆற்றும் கடமை என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.