சென்னையில் உள்ள அண்ணா சாலை அருகே முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு புதிய சிலை அமைக்கப்படுகிறது.
ஐந்து முறை தமிழ்நாட்டின் முதல்வராகவும், மூத்த அரசியல் தலைவருமான கலைஞர் கருணாநிதிக்கு சென்னை மாநகராட்சியில் புதிதாக சிலை அமைக்கப்படவுள்ளது. சென்னை சைதாப்பேட்டை தொகுதி பஜார் சாலை மற்றும் அண்ணா சாலை சந்திப்பில் முழு உருவச்சிலை அமையவுள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வந்தன. சிலையமைக்க தடையில்லா சான்றிதழ் கோரி சென்னை மாநகராட்சியிடம் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் , இன்றைய சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டத்தில் கருணாநிதி முழு உருவச்சிலை நிறுவ தடையில்லா சான்று வழங்க மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சட்டரீதியான அனுமதி மற்றும் சிலை வடிவமைப்புப் பணிகள் நிறைவுபெற்ற பின்னர் செப்டம்பர் மாதத்தின் இறுதியில் கலைஞர் கருணாநிதியின் முழு உருவச்சிலை திறக்கபடலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், சென்னை ஓமந்தூரார் வளாகத்தில் ஏற்கெனவே கருணாநிதிக்கு சிலை உள்ள நிலையில் மீண்டும் சைதாப்பேட்டை அண்ணா சாலை அருகே புதிய முழு உருவச்சிலை வைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.














