பாகிஸ்தானிலிருந்து புலம்பெயர்ந்த ஹந்துக்களின் அவல நிலை குறித்து மத்திய அரசு பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. முன்னதாக, பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் வசித்து வந்த சிறுபான்மை ஹிந்துக்கள் அங்கு மதரீதியிலான துன்புறுத்தல்களுக்கு ஆளானதால், சில ஆண்டுகளுக்கு முன் நம் நாட்டுக்கு புலம்பெயர்ந்தனர். அவர்கள் வடக்கு டெல்லியின் ஆதர்ஷ் நகர் குடிசை பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்கள் வசிக்கும் இடத்திற்கு தடையில்லா சான்று வழங்கப்படவில்லை. இதனால் அந்த பகுதியில் மின் இணைப்பு தரப்படவில்லை.
அந்த பகுதியில் உள்ள 200 குடும்பங்கள் மின் இணைப்பு இல்லாமல் மிக மோசமான நிலையில் வசித்து வருகின்றன. இந்த குடிசை பகுதிக்கு மின் இணைப்பு வழங்குவது தொடர்பாக, ஹரி ஓம் என்ற சமூக ஆர்வலர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிமன்றம், புலம்பெயர்ந்த ஹிந்துக்களின் அவலநிலையை மத்திய அரசு அனுதாபத்துடன் அணுகும் என நம்புவதாக தெரிவித்தது. இது தொடர்பாக இரண்டு வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.