இலங்கையில் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை தொடங்கி விட்டதாக அதிபர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார்.
இலங்கையில் பல்லாண்டுகளாக நீடித்து வரும் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண அதிபர் ரணில் விக்ரமசிங்கே முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பாக சமீபத்தில் தமிழர் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து பேசினார். இதன் தொடர்ச்சியாக மலையக தமிழர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களையும் இலங்கை தேசிய சமூகத்துடன் இணைக்கும் பணிகள் நடைபெறும் என ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார்.
இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது: இலங்கை தமிழர்களுடன் பேச்சுவார்த்தையை தொடங்கி இருக்கிறோம். அவர்களது பிரச்சினைகள், நல்லிணக்கத்துக்கான வழிகள் பற்றிப் பேச ஆரம்பித்துள்ளோம். இலங்கை தமிழர்களுடன் பேசி அவர்களின் பிரச்சினைகளைப் புரிந்து கொண்டு அதற்கான தீர்வு நடவடிக்கைகளை அரசு தொடங்கி உள்ளது. இன நல்லிணக்கம் நிலவட்டும். மேலும் ஒரு புதிய பொருளாதாரத்தை உருவாக்குவோம். இது நம்மை மிகவும் போட்டித்தன்மை கொண்ட பொருளாதாரமாக இருக்க உதவும். இது நம்மை செழிப்பாக மாற்றும். இவ்வாறு ரணில் விக்ரமசிங்கே கூறினார்.