வங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, புயல் சின்னமாக வலுப்பெற்றுள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் தமிழகம், புதுச்சேரியில் நேற்று வறண்ட வானிலை நிலவியது. தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதையொட்டிய மாவட்டங்களில், இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யும். இந்திய பெருங்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இந்த மண்டலமானது, நாளை மறுதினம் இலங்கை கடற்பகுதியை சென்றடையும்.
இதன் காரணமாக தென் மாவட்டங்களில் அனேக இடங்களிலும், வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யும். தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் துாத்துக்குடி மாவட்டங்களில், நாளை மறுதினம் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.