ராகிங்கில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
ராகிங் விவகாரம் குறித்து அனைத்து மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட எஸ்பிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், ராகிங் சம்பவம் தொடர்பான புகார்கள் மீது சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தாரால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் மீது திருப்தியடையாத பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் அளிக்கும் புகார் மீது உடனடியாக காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வழக்கு பதிவு செய்வதில் தாமதம் ஏற்படக்கூடாது. கல்வி நிறுவனங்களில் ராகிங் கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும், மாநகர காவல் ஆணையர்களும், ராகிங் மற்றும் அது தொடர்பான புகார்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.