துருக்கி, சிரியா, நியூசிலாந்தை தொடர்ந்து, இன்று பிலிப்பைன்ஸில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் வெகுவாக அச்சமடைந்துள்ளனர்.
நிலநடுக்கம் குறித்து அமெரிக்க புவியியல் மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், "பிலிப்பைன்ஸில் உள்ள மாஸ்பேட் தீவின் மியாகா பகுதியில், சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சுமார் 11 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், கட்டிடங்கள் குலுங்கின. இதனால், பீதி அடைந்த மக்கள், வீடுகளை விட்டு வெளியேறி, வீதிகளில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கத்தை தொடர்ந்து நில அதிர்வுகளும் உணரப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. எனினும், நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
நேற்றும், இன்றும், தொடர்ச்சியாக, ரிங் ஆஃப் ஃபயர் பகுதியை சுற்றி நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ஜப்பானிலிருந்து தென்கிழக்கு ஆசியா வழியாக பசிபிக் படுகை முழுவதும் தீவிர நில அதிர்வுகள் உணரப்படுவது வழக்கம் தான் என்றாலும், தொடர்ச்சியாக நிலநடுக்கம் குறித்த செய்திகள் வெளியாவதால் மக்கள் அச்சமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.