இலங்கை மற்றும் இந்திய மாணவர்கள் இணைந்து விண்வெளி ஆய்வில் புதிய சாதனை படைக்க உள்ளனர். இலங்கையின் வடக்கு பல்கலைக்கழகம் மற்றும் இந்தியாவின் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா இணைந்து ஒரு தகவல் தொடர்பு செயற்கைக்கோளை உருவாக்கும் புதிய திட்டத்தை தொடங்கியுள்ளனர். இந்த செயற்கைக்கோள் 2025 ஆம் ஆண்டு இஸ்ரோ மூலம் விண்ணில் ஏவப்பட உள்ளது.
இந்த திட்டத்தில் இலங்கையின் யாழ்ப்பாணம் மற்றும் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கின்றனர். முதல்கட்டமாக, இலங்கை மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 50 பள்ளி மாணவர்களுக்கு செயற்கைக்கோள் தொழில்நுட்பம் குறித்த பயிற்சிகள் அளிக்கப்படும். பின்னர், 30 கல்லூரி மாணவர்கள் இந்த பயிற்சியை அடிப்படையாகக் கொண்டு செயற்கைக்கோளை உருவாக்கும் பணியில் ஈடுபடுவார்கள். வடக்கு பல்கலைக்கழகத்தின் தலைவர் இந்திரகுமார் பத்மநாதன் மற்றும் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீமதி கேசன் ஆகியோர் இந்த திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.