அமெரிக்காவில் உள்ள பல்வேறு கல்வி நிலையங்களில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டத்தில் களமிறங்கியுள்ளனர். இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.
முதன் முதலில், கொலம்பியா பல்கலைக்கழகத்தில், மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். அதைத்தொடர்ந்து, ஹார்வர்ட், யேல், ஐவி லீக் ஸ்கூல், தெற்கு கலிபோர்னியா, டெக்சாஸ் பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களும் போராட்டத்தில் களமிறங்கினர். “போராட்டத்தை கட்டுப்படுத்த கல்வி நிறுவன நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்; அல்லது காவல்துறையினர் மூலம் போராட்டம் நிறுத்தப்படும்” என்று அமெரிக்க நாடாளுமன்ற தலைவர் மைக் ஜான்சன் தெரிவித்திருந்தார். அதன்படி, போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதனால், அமெரிக்க பல்கலைக்கழகங்களில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மேலும், பாலஸ்தீன ஆதரவாளர்களை கைது செய்வது உலக அளவில் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.