ஆஸ்திரேலியாவுக்கு சென்று கல்வி பயில நினைக்கும் மாணவர்களுக்கு உதவியாக, ஆஸ்திரேலிய அரசு கண்காட்சி ஒன்றை நடத்துகிறது. வரும் செப்டம்பர் 12ஆம் தேதி, சென்னையில் உள்ள தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் இந்த கண்காட்சி நடைபெறுகிறது. ஸ்டடி ஆஸ்திரேலியா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கண்காட்சி, அன்று பிற்பகல் 1:30 மணி முதல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் வர்த்தக மற்றும் முதலீட்டு ஆணையம் - ஆஸ்ட்ரேட், இந்த கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது.
ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகள் ஸ்டடி ஆஸ்திரேலியா கண்காட்சியில் பங்கேற்கின்றனர். மேலும், ஆஸ்திரேலியா கல்வித்துறை மற்றும் உள்துறை அமைச்சக அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். எனவே, ஆஸ்திரேலியாவில் கல்வி பயில்வதை குறித்து, மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் இந்திய கல்வி நிறுவனங்கள் தங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை தீர்த்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் கல்வி பயில்வதற்கு முன்னால் மாணவர்கள் கருத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள், கட்டணங்கள், ஆஸ்திரேலியாவில் இருக்கும் எதிர்கால வாய்ப்புகள் குறித்த பல்வேறு விவரங்கள் கண்காட்சியில் விவாதிக்கப்பட உள்ளன.