சூடானின் கெசிரா மாநில தலைநகர் வாட் மதனியில் உள்ள ஒரு மசூதி மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 31 பேர் பலியாகியுள்ளதாக உள்ளூர் அரசு சாரா அமைப்புகள் தெரிவித்துள்ளன. கடந்த ஞாயிறன்று மாலை தொழுகை நடைபெற்ற போது, அல்-இம்திடாத் பகுதியில் உள்ள ஷேக் அல் ஜுலி மசூதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது.
சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவம் இடையே நீண்ட காலமாக தொடர்ந்து வரும் மோதல் காரணமாக இதுபோன்ற தாக்குதல்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. இந்த மோதலில் இதுவரை 24,580-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், மசூதி தாக்குதலில் இதுவரை 31 பேர் உயிரிழந்ததாகவும், அதில் 15 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டதாகவும், பல உடல்கள் அடையாளம் தெரியாமல் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.