சூடானில், அண்மை காலமாக உள்நாட்டு போர் தீவிரம் அடைந்து வருகிறது. இந்தப் போர் காரணமாக, கிட்டத்தட்ட 1.4 மில்லியன் மக்கள் புலம் பெயர்ந்து உள்ளதாக ஐநாவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 15ஆம் தேதிக்கு பிறகு, சூடானில் உள்நாட்டு போர் தீவிரமடைந்தது. ஆனால், அதற்கு முன்னதாகவே, சூடான் நாட்டில் அரசியல் குழப்பம் ஏற்பட்டிருந்தது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்படைந்தனர். இதன் காரணமாக, அவர்கள் இடம்பெயரும் நிலை ஏற்பட்டது. மேலும், கடந்த ஒரு மாதத்தில் மட்டும், ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் புலம் பெயர்ந்ததாக கருதப்படுகிறது. அத்துடன், சிரியா, எரித்ரியா, தெற்கு சூடான் ஆகிய பகுதிகளில் இருந்து கிட்டத்தட்ட 1.13 மில்லியன் அகதிகள் சூடானுக்கு வந்தடைந்துள்ளனர். அதே வேளையில், மே 26 ஆம் தேதி நிலவரப்படி, 345000 மக்கள் சூடானில் இருந்து அண்டை நாடுகளுக்கு அகதிகளாக சென்றுள்ளனர். குறிப்பாக, எகிப்து மற்றும் எத்தியோப்பியா நாடுகளுக்கு அவர்கள் சென்றுள்ளனர். தொடர்ந்து, சூடானில் சாதகமான சூழல் ஏற்படவில்லை என்பதால், புலம்பெயர்வோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று ஐநா அறிக்கையில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.