உத்தர கன்னடாவில் உள்ள கும்டாவில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைக்கப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் சுதாகர் கூறினார்.
சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைப்பது குறித்து பெங்களூரு விதான் சவுதாவில் நேற்று உத்தர கன்னடா மாவட்ட பொறுப்பு அமைச்சர் சிவராம் ஹெப்பார், சுகாதாரத் துறை அமைச்சர் சுதாகர் ஆகியோர் எம்.எல்.ஏ க்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
இதுகுறித்து அமைச்சர் சுதாகர் கூறுகையில், கும்டாவில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது உத்தர கன்னடா மாவட்டத்தின் மையப்பகுதியில் உள்ளது. உத்தர கன்னடா மாவட்ட மக்களுக்கு சிறந்த சேவை வழங்க வேண்டும். மருத்துவமனைகளில் டாக்டர்கள் பற்றாக்குறையை நீக்க வேண்டும். மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்த வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை இப்பகுதி மக்கள் விடுத்து வந்தனர்.
சட்டசபை கூட்டம் முடிந்த பின், உத்தர கன்னடா மாவட்டத்துக்கு சென்று மருத்துவமனை அமைக்கப்பட உள்ள இடம் ஆய்வு செய்யப்படும். கார்வாரில் மருத்துவக் கல்லுாரி அமைப்பது, பல்வேறு மருத்துவமனைகளுக்கு வசதிகளை அதிகப்படுத்துவது தொடர்பாகவும் முடிவு செய்யப்படும் என்று அவர் கூறினார்.