நாடு முழுவதும் கிராம நீதிமன்றங்கள் அமைக்கும் விவகாரத்தில் அனைத்து உயர்நீதிமன்றங்களும் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சட்டத்தின்படி, இந்திய குடிமகன் யாரும் சமுதாய, பொருளாதார மற்றும் இதர காரணங்களுக்காக நீதி பெறுவதில் தாமதம் இருக்கக் கூடாது. எனவே அதனை தீர்க்கும் விதமாக கிராமங்களில் நீதிமன்றங்கள் அமைப்பதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இதன்படி பல்வேறு மாநில அரசுகள் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி உச்சநீதிமன்றத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன் விசாரணை நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த விவகாரத்தில் ஒவ்வொரு உயர் நீதிமன்றமும் கண்காணிப்பு அமைப்பு என்பதனால், அவர்களையும் எதிர்மனுதாரர்களாக சேர்க்கிறோம். அதனால் நாட்டில் உள்ள அனைத்து உயர்நீதிமன்றங்களும் இந்த விவகாரத்தில் பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனர்.