அரவிந்த் கெஜ்ரிவால் தனது இடைக்கால ஜாமினை நீட்டிக்க மனு தாக்கல் செய்திருந்தார்.
டெல்லி அரசின் மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே மக்களவைத் தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்காக ஜூன் ஒன்றாம் தேதி வரை இவர் இடைக்கால ஜாமினில் வெளியே வந்தார். இந்நிலையில் ஜூன் ஒன்றாம் தேதியுடன் இடைக்கால ஜாமின் முடிவடைய உள்ள நிலையில் தனது உடல் நிலையை காரணம் காட்டி மேலும் 7 நாட்கள் ஜாமீன் நீட்டிக்க வேண்டும் என கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் தனது உடல்நிலை இயல்புக்கு மாறாக குறைந்துள்ளது. சிறை
அதிகாரிகளின் நடவடிக்கைகளால் தான் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அவசியமான மருத்துவ பரிசோதனைகளை செய்து கொள்ள 7 நாட்கள் அவகாசம் வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இந்த மனுவானது நேற்று உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்கு வந்த நிலையில் இதனை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது