ஆப்பிரிக்க நாடான காங்கோவின் கிழக்கு மாகாணம் கிணு. இங்கு இஸ்லாமிய பயங்கரவாதிகளின் செயல்பாடுகள் அதிகரித்து வருகிறது. இங்குள்ள வளமிக்க வைர சுரங்கங்களை இந்த தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். இங்கு இவர்கள் தனி அரசாங்கம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அங்கு ஓய்ஷா என்ற கிராமத்தில் பயங்கரவாதிகள் சிலர் திடீரென அத்துமீறி புகுந்து தாக்குதலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சரமாரியாக கண்ணில் படும் நபர்களை துப்பாக்கியால் சுட்டனர். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடினர். இந்த தாக்குதலில் சுமார் 26 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து காங்கோ ராணுவத்தினர் தகவல் அறிந்து அங்கு விரைந்தனர். தற்போது அங்கு மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் பலரின் நிலைமை மோசமாக இருப்பதால் பலி எண்ணிக்கை கூடும் என கூறப்படுகிறது.