பிரபல உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கி, விரைவில் குருகிராம் அல்லது பெங்களூரு நகரங்களில் ட்ரோன் டெலிவரியை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கான முதல் கட்ட பரிசோதனையில் நிறுவனம் செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்த திட்டத்திற்காக, அரசு துறை சார்ந்த நிறுவனங்கள் மற்றும் ட்ரோன் தயாரிப்பாளர்களுடன் இணைந்து ஸ்விக்கி பணியாற்றி வருவதாகச் சொல்லப்படுகிறது.
இது குறித்து பேசிய ஸ்விக்கி நிறுவனத்தின் CTO டேல் வாஸ், “தற்போதைய நிலையில், சாலை மார்க்கமாக, கனரக வாகனங்கள் மூலம், நிறுவனத்தின் மொத்த சேமிப்பு கிடங்கில் இருந்து பாட் (POD) எனப்படும் நகரத்தின் மைய கிடங்கிற்கு பொருட்கள் அனுப்பப்படுகின்றன. எனவே, போக்குவரத்து சிக்கல்கள் காரணமாக, சில நேரங்களில் பொருட்கள் இருப்பில் இல்லாத நிலை ஏற்படுகிறது. மேலும், சேமிப்பு கிடங்கில் இருந்து வாடிக்கையாளரின் வீடு வரையிலான போக்குவரத்து, எப்போதும் சவால்கள் நிறைந்ததாகவே உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “ட்ரோன் டெலிவரி தொடர்பாக நாங்கள் மென்பொருள் நிறுவனங்கள் மற்றும் புத்தாக்க நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற திட்டமிட்டுள்ளோம். அத்துடன், ட்ரோன்கள் பறப்பதற்கான பாதைகள் குறித்து அரசாங்கத்திடம் ஒப்புதல் வாங்கி உள்ளோம்” என்று கூறினார். அத்துடன், ட்ரோன்கள் மூலம் பொருட்களை நேரடியாக வாடிக்கையாளரின் வீட்டிற்கு டெலிவரி செய்வதால், பொருட்களை தவறாக பயன்படுத்துதல், மோசடியில் ஈடுபடுதல் மற்றும் பாதுகாப்பின்மை போன்ற சிக்கல்கள் பன்மடங்கு குறைக்கப்படும் என்று கூறியுள்ளார்.
ஸ்விக்கி நிறுவனத்தில் பணியாற்றுவதற்கு முன்னர், அவர் அமேசான் மற்றும் இன்போசிஸ் நிறுவனங்களில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, அவரது தலைமையில் இந்தத் திட்டம் வெற்றி பெறும் என்று பரவலாகக் கூறப்படுகிறது. அத்துடன், பிரபல ட்ரோன் தயாரிப்பாளரான கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம், இந்த திட்டம் குறித்து ஸ்விக்கி நிறுவனத்துடன் கலந்தாலோசித்ததாக அண்மையில் தெரிவித்தது. எனவே, ஸ்விக்கி நிறுவனத்தின் ட்ரோன் டெலிவரி திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.