சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா பொறுப்பேற்றுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக கடந்த நவம்பர் மாதம் முனீஷ்வர்நாத் பண்டாரி நியமிக்கப்பட்டார். அவருக்கு 62 வயது நிறைவடைந்ததையொட்டி செப்டம்பர் 12ஆம் தேதி பணி ஓய்வு பெற்றார்.
தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி ஓய்வுபெறுவதால், அடுத்த நிலையில் உள்ள மூத்த நீதிபதி எம். துரைசாமியை பொறுப்புத் தலைமை நீதிபதியாக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி செப்டம்பர் 13ஆம் தேதி முதல் பொறுப்பு நீதிபதியாக நீதிபதி துரைசாமி செயல்பட்டு வருகிறார். ஆனால் செப்டம்பர் 21ஆம் தேதி அவரும் பணி ஓய்வுபெறவுள்ளார்.
இதனால் மூத்த நீதிபதி டி.ராஜாவை பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். செப்டம்பர் 22 முதல் தலைமை நீதிபதி பொறுப்பை நீதிபதி ராஜா கவனிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.