புத்தொழில் தொடர்பான தமிழக அரசின் முன்னோடி செயல்திட்டங்களை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
சென்னையில் உலகத்தமிழ் புத்தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் புத்தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கான குளோபல் தமிழ் ஏஞ்சல்ஸ் இணையதள தொடக்க விழா நடைபெற்றது. மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழகத்தைச் சேர்ந்த புத்தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்ய, அமெரிக்க வாழ் தமிழக முதலீட்டாளர்கள் ரூ.16.50 கோடி முதலீடுகளுக்கான விருப்பக் கடிதத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசனிடம் அளித்தனர்.
அப்போது பேசிய முதலமைச்சர், தமிழகத்தில் புத்தொழில் முதலீடுகளுக்கு எப்போதும் இல்லாத அளவுக்கு 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் கிடைத்துள்ளது. 2021-ம் ஆண்டைவிட இது 70 சதவீதம் அதிகம் ஆகும். இது தமிழகத்தின் மீது முதலீட்டாளர்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பதைக் காட்டுகிறது. அரசின் சார்பில் நடத்தப்பட்டு வரும் ஆக்கப்பூர்வமான முயற்சிகளில் உலகளாவிய தமிழ் முதலீட்டாளர்கள் பெருமளவில் பங்கு பெற வேண்டும் என்று கூறினார்.