ஒரு மொழியை செம்மொழி எனக் கூற வேண்டுமானால் அது முழு வளர்ச்சியை அடைந்து விட்டதாக இருக்க வேண்டும். முழு வளர்ச்சியின் அளவுகோல் என்னவென்றால் மொழியின் பயன்பாட்டில் மாற்றம் இல்லாமல் இருப்பதே ஆகும். அதாவது கால மாற்றத்தால் புதிய புதிய சொற்கள் உருவாக்கப் பட்டாலும் மொழியின் தன்மை மாறக்கூடாது. ஒலி அமைப்பில் எந்தவித வேறுபாடும் இருக்கக்கூடாது. ஒரு மொழி முழு வளர்ச்சி அடைய ஒரு காலஅவகாசம் தேவை. ஆனால் நம் தமிழ் மொழி இந்த முழு வளர்ச்சியை 2500 ஆண்டுகளுக்கு முன்பே அடைந்துவிட்டது என்றால் எவரும் மறுக்க முடியாது. அப்படியென்றால் எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்த மொழி தோன்றியிருக்கும்??!!! தமிழ் மொழியின் செம்மைத் தன்மைக்கான சான்று இதோ:
மதுரை அமெரிக்கன் கல்லூரியின் முன்னாள் கணிதவியல் பேராசிரியர் Dr. பாண்டியராஜன் அவர்கள். அவர் தமிழ் மொழியை புள்ளியல் பகுப்பாய்வு மூலம் ஆய்வு செய்தவர் ஆவார்.
சங்கத்தமிழ் நூல்கள், காப்பியங்கள், இடைக்கால நூல்கள், நாளிதழ்கள், வார இதழ்கள், பாடபுத்தகங்கள், நாவல்கள், சிறுகதைகள், தற்கால கவிதைகள், அகராதி, கடிதங்கள், விளம்பரங்கள் என பல்வேறு நூல்களை ஆய்வுக்கு உட்படுதினார்.
சங்க காலம் முதல் சமீப காலம் வரை உள்ள நூல்களில் இருந்து கிட்டத்தட்ட 2.5 லட்சம் சொற்களைக் கணினியின் துணை கொண்டு ஆய்வு செய்தார். அந்த ஆய்வின் படி அவர் கண்டறிந்த வியத்தகு உண்மை என்னவென்றால்
தொல்காப்பியர் காலம் முதல் தற்காலம் வரை, ஒரு நூலில் உயிர் எழுத்துக்கள் 44 சதவீதமும் மெய்யெழுத்துக்கள் 56 சதவீதமும் இடம்பெறுகின்றன. இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்த பின்பும் கூட இந்த அளவில் மாற்றம் ஏதுமில்லை. தொல்காப்பியத்தில் இருக்கும் அதே விழுக்காடு இன்றைய தினசரி நாளிதழிலும் மாறாமல் அப்படியே இருக்கின்றது.
குறில் எழுத்துக்கள் 80 சதவீதமும் நெடில் எழுத்துக்கள் 20 சதவீதமும் உள்ளது. தமிழர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக குறில் ஒலியை முதன்மையாக பயன்படுத்துகின்றனர்.
வல்லின எழுத்துக்கள் 44 சதவீதம், மெல்லினம் 26 சதவீதம், இடையினம் 30 சதவீதமும் இடம்பெறுகின்றன. கால மாற்றத்தால் எத்தனை புதிய சொற்கள் உருவாக்கப்பட்டு, பயன்படுத்தப் பட்டாலும் இந்த அமைப்பு மாறவில்லை. பெயருக்கு ஏற்றார்போல வல்லினம் அதிகமாகவும், மெல்லினம் குறைவாகவும், இடையினம் இரண்டிற்கும் நடுவிலும் அமைந்துள்ளது.
இந்த அமைப்பிற்கு விதிவிலக்கு என்று கூறும்படி 2500 ஆண்டுகளில் ஒரு நூல் கூட இல்லை என்பது மிகவும் வியப்பிற்குறியதாகும். ஒரு ஒலியைத்தான் நாம் எழுத்துக்களாக பயன்படுத்துகிறோம். பேச்சு வழக்கில் ஒலி என்பதே எழுத்து வழக்கில் எழுத்து என்பதாகும். அப்படியென்றால் தமிழ் மொழியின் ஒலியில் பல்லாயிரம் ஆண்டுகளாக மாற்றம் என்பதே நிகழவில்லை. அதாவது 2500 வருடத்திற்கு முன்பே ஒரு நிலையான தன்மையை, ஒரு செம்மை நிலையை தமிழ் மொழி அடைந்துவிட்டது என்பது தெளிவாகிறது.
இந்தக் கட்டுரையை ஆய்வு செய்தாலும் மேற்கூறிய அதே விழுக்காடில் எழுத்துக்கள் அமைந்திருக்கும் என்பது உறுதி. உலகின் மூத்த மொழி தமிழ் என்பதில் ஐயமில்லை. தமிழே உன்னை வியக்கிறேன்!!!