தமிழக கவர்னராக ஆர்.என். ரவி கடந்த 2021 ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். அன்று முதல் தமிழக அரசுக்கும் அவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. இதில் தமிழக அரசு அனுப்பும் கோப்புகளில் கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் பல்வேறு விளக்கங்களை கேட்டு திருப்தி அடைந்தால் மட்டுமே கையெழுத்து போடுகிறார். மீதமுள்ள கோப்புகளை நிலுவையில் வைத்து திருப்பி அனுப்பி விடுகிறார். மேலும் அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் மசோதாவை நிறுத்தி வைத்திருக்கிறேன் என்றால் அது நிராகரிக்கப்பட்டதன் அர்த்தம் என்று கூறியிருந்தார். இதுவரை 25 சட்ட மசோதாக்களுக்கு அவர் கையெழுத்திடாமல் உள்ளார். இதனால் அவரது செயல்பாட்டிற்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதில் தமிழக அரசு அனுப்பும் மசோதாக்களுக்கு உரிய நேரத்தில் ஒப்புதல் அளிக்க உத்தரவிடக்கோரி தமிழக அரசின் சார்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் அரசியல் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மற்றும் அரசியல் அமைப்பின் 200 வது பிரிவின் கீழ் ஒப்புதல் அளிக்க கால அளவு நிர்ணயிக்க வேண்டும் எனவும் இந்த மனுவில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.