வெள்ள நிவாரணம் வழங்க கோரி மத்திய அரசு மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடுத்துள்ளது.
கடந்த ஆண்டு இறுதியில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கன மழை காரணமாக பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதேபோல் தூத்துக்குடி, திருநெல்வேலி தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் மழை நீர் கொட்டி தீர்த்தது. இதில் ஆற்றின் கரையோர கிராம மக்கள் மிகப்பெரிய அளவில் பாதிப்படைந்தனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்க தமிழக அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தது. ஆனால் மத்திய அரசு நிவாரணம் வழங்கவில்லை. தற்போது தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வரும் நிலையில் மு.க ஸ்டாலின் மத்திய அரசு வெள்ள நிவாரண நிதியாக ஒரு பைசா கூட தரவில்லை என விமர்சனம் செய்து வருகிறார். மேலும் மத்திய அரசு மீது வழக்கு தொடரப்படும் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் வெள்ள நிவாரணம் வழங்க கோரி மத்திய அரசு மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.














