தமிழக அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையான அகவிலைப்படி உயர்வு குறித்து பரிசீலித்து, அகவிலைப்படி உயர்வை ஜனவரி 1-ம் தேதி முதல் செயல்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி, தற்போது 34 சதவீதமாக உள்ள அகவிலைப்படி ஜனவரி 1-ம் தேதி முதல் 38 சதவீதமாக உயர்த்தப்படும். இதனால் சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் பயனடைவர்.
இந்த அகவிலைப்படி உயர்வால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.2,359 கோடி கூடுதல் செலவு ஏற்படும். எனினும், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் நலன் கருதி இந்த நிதிச்சுமையை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.