மே 15-ந் தேதிக்குள் கூட்டுறவு சங்க தேர்தலுக்கு புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கூட்டுறவு சங்கங்களின் விதிகள் மற்றும் உறுப்பினர் சேர்க்கை படிவம் 3 முக்கியமான திருத்தங்களை மேற்கொண்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூட்டுறவு சங்க பதிவாளரின் சுற்றறிக்கையில் உறுப்பினர் பட்டியல் தயார் செய்யவும் அதற்கான காலமும் குறிப்பிடப்பட்டுள்ளன. புதிதாக உறுப்பினர்களை சேர்க்க மே மாதம் 15-ந் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உறுப்பினராக உள்ள நபர்களின் ஆதார் எண், குடும்ப அட்டை விவரங்களை 15.6.2023-க்குள் சேகரிக்க வேண்டும்.
தகுதியான உறுப்பினர்கள் பட்டியல்கள் மீதான ஆட்சேபனை கோரிக்கை பெற 23.8.2023 வரை 7 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட வேண்டும். மேலும் பொதுப்பேரவை கூட்டம் நடத்தப்பட்டு தகுதியான உறுப்பினர்களின் இறுதி பட்டியல் 31.10.2023 அன்று வெளியிடப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.