Lஆசிய விளையாட்டு போட்டியில் தமிழக வீரர், வீராங்கனைகள் 12 பேர் பல்வேறு பதக்கங்களை வென்று சாதனை படைத்து உள்ளனர்.சீனாவில் ஹாங்சேவ் நகரில் 19ஆவது ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்திலிருந்து 43 வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதுவரை தமிழக வீரர்கள் 12 பேர் பல்வேறு பதக்கங்களை பெற்று முத்திரை பதித்து வருகின்றனர். தமிழகத்தைச் சேர்ந்த பிரவீன் சித்திரவேல், ஆகியோர் தடகளப் போட்டியில் வெண்கலம் பதக்கம் பெற்றுள்ளனர். டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் ராம்குமார் ராமநாதன் வெள்ளி பதக்கம் பெற்றுள்ளார். ஸ்குவாஷ் போட்டியில் இந்திய அணி வெண்கல பதக்கம் பெற்றுள்ளது.இதில் தமிழகத்தைச் சேர்ந்த ஜோஸ்னா சின்னப்பா, தீபிகா பள்ளிக்கல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் தமிழகத்தைச் சேர்ந்த ஆனந்த் குமார் 3000 மீட்டர் ஸ்பீட் ஸ்கேட்டிங் ஆண்கள் பிரிவில் இடம் பெற்றுள்ளனர். இதில் வெண்கல பதக்கத்தை இந்திய அணி பெற்றுள்ளது. அதேபோல் பெண்களுக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்பீட் ஸ்கேட்டிங் பிரிவில் இந்திய அணி வெண்கல பதக்கம் பெற்றது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஆர்த்தி கஸ்தூரி ராஜ் மற்றும் கார்த்திகா ஜெகதீஸ்வரன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். துப்பாக்கி சுடும் ஆண்கள் ட்ராப் அணியின் பிரிவில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பிரித்திவிராஜ் தொண்டைமான் இடம் பெற்றிருக்கிறார். இதில் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றுள்ளது. மேலும் தடகளப் போட்டியில் கலப்பு 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் சுபா வெங்கடேஷ், வித்யா ராஜேஷ் ஆகியோர் கலந்துகொண்டு வெள்ளிப்பதக்கம் பெற்றுள்ளனர்.