மத்திய அரசின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக இந்திய அளவில் தமிழகம் மூன்றாம் இடம் பிடித்துள்ளது.
இது தொடர்பாக அரசு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற துறையின் மூலம் செயல்படுத்தப்படும் அனைவருக்கும் வீடு திட்டத்தில் சிறப்பாக செயல்பட்டமைக்கு தேசிய அளவில் 3ஆம் இடம் பிடித்த தமிழ்நாட்டிற்கு விருது வழங்கப்பட்டது. குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் 19.10.2022 அன்று விழா நடைபெற்றது. விழாவில் நரேந்திர மோடியிடமிருந்து குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் விருதினை பெற்றார்.
இந்தியப் பிரதமரின் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தை (நகர்ப்புறம்) சிறப்பாக செயல்படுத்தும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பயனாளிகள் அங்கீகரிப்பதலுக்காக மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற துறையால், ‘பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா விருதுகள் - 2021 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
சிறப்பாக செயல்பட்ட மாநிலம் என்ற பிரிவில் தமிழகத்திற்கு 3ஆவது இடமும், மாநகராட்சிகளில் மதுரை மாநகராட்சிக்கு 3ஆவது இடமும், பேரூராட்சிகள் பிரிவில் கோவை மாவட்டம், பெரிய நெகமம் பேரூராட்சிக்கு 5ஆவது இடமும் கிடைத்துள்ளன.














