தமிழகம் முழுவதும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வரும் நவ.9-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படம் என மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி மேற்கொள்ளப்படும். அதற்கு அடுத்த ஆண்டு ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இந்த ஆண்டு வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதுகுறித்து தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ கூறுகையில் :
தமிழகம் முழுவதும் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் இந்த ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வரும் நவ.9-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. அன்று முதல் டிசம்பர் 8-ம் தேதி வரை வாக்காளர்பட்டியல் திருத்தும் பணிகள் நடைபெறும். இந்த காலகட்டத்தில் வாக்காளர் பட்டியலில் முகவரி திருத்தம் போன்ற வற்றை செய்துகொள்ளலாம். 17 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர்சேர்க்க விண்ணப்பிக்கலாம். வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்கும் பணியையும் மேற்கொள்ளலாம்.
இந்த ஒரு மாத காலத்தில் 2 சனி, ஞாயிறுகளில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்கள் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெற உள்ளது. அதற்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும். இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி 5-ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.











