கடந்த 2022 ஆம் ஆண்டில், இந்தியாவின் மொத்த ஏற்றுமதி குறியீட்டில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் சுமன் பெர்ரி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்றுமதி தயார்நிலை குறியீட்டு அட்டவணையில், தமிழ்நாடு 80.89 புள்ளிகள் எடுத்து முதலிடம் பிடித்துள்ளது. அடுத்தடுத்த இடங்களில், மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்கள் உள்ளன. அவற்றின் புள்ளிகள் முறையே, 78.2, 76.36, 73.22 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 9% ஆக உயர்ந்துள்ளது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்று காலத்திற்குப் பிறகு, அந்தந்த மாநிலங்களின் புவியியல் சார்ந்த அம்சங்களின் அடிப்படையில் ஏற்றுமதி அமைந்துள்ளதாக நிதி ஆயோக் தெரிவித்துள்ளது. மேலும், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இடையே நிலவும் போட்டித் தன்மை கருத்தில் கொள்ளப்பட்டு, இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.