இன்று தமிழ்நாடு மாநில அரசின் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மாநிலத்தின் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் அறிக்கையை வாசித்தார். பட்ஜெட்டில் இடம்பெற்ற முக்கிய 10 அறிவிப்புகள் பின்வருமாறு:
1. தஞ்சாவூரில் சோழர்களின் பெருமையை எடுத்துக் கூறும் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
2. பள்ளிக்கல்வித்துறைக்கு 40299 கோடி ஒதுக்கீடு. உயர்கல்வித்துறைக்கு 6967 கோடி ஒதுக்கீடு. ஆதிதிராவிட மாணவர்களுக்கு விடுதிகள் உள்ளிட்ட பல திட்டங்களுக்கு தனியாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
3. பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில், இல்லத்தரசிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்படும்.
4. அரசுப் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 1500 கோடி ரூபாயில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
5. தேனாம்பேட்டை முதல் அண்ணா சாலை வரை 521 கோடியில், 4 வழிச்சாலை மேம்பாலம் கட்டப்படும்.
6. மதுரையில் 8500 கோடி, கோவையில் 9000 கோடி மதிப்பில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.
7. சேலத்தில் 850 கோடி செலவில், 119 ஏக்கரில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும்.
8. மருத்துவத்துறைக்கு 18661 கோடி ஒதுக்கீடு. கிண்டியில் கலைஞர் பெயரில் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை தொடங்கப்படும்.
9. மாற்றுத் திறனாளிகளுக்கான மாத ஓய்வூதியம் 1500 ஆக உயர்த்தப்படும். கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு 2000 ஆக தொகை உயர்த்தப்படும்.
10. ஈரோட்டில், 80000 ஹெக்டேரில் தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம் அமைக்கப்படும்.