ஜெர்மன் மேம்பாட்டு வங்கி, 2008 முதல், தமிழக அரசுடன் இணைந்து, நீடித்த நகர்ப்புற உட்கட்டமைப்புகளை ஏற்படுத்த நிதியுதவி வழங்கி வருகிறது. இத்திட்டம், 1969.47 கோடி ரூபாய் செலவில் இரண்டு கட்டமாக செயல்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, ஜெர்மன் மேம்பாட்டு வங்கி நிதியுதவியுடன், 4250 கோடி ரூபாய் மதிப்பில் மூன்றாம் கட்ட, நீடித்த நகர்ப்புற உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.
ஜெர்மன் மேம்பாட்டு வங்கி மற்றும் இந்திய அரசு இடையே கடந்த மாதம் 24ம் தேதி டெல்லியில் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் தொடர்ச்சியாக, சென்னையில் இம்மாதம் 2ம் தேதி ஜெர்மன் மேம்பாட்டு வங்கி, தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனம் இடையே திட்ட ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும், ஜெர்மன் மேம்பாட்டு வங்கி மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையே தனி ஒப்பந்தம் கையெழுத்தானது.