தமிழர் கட்டடக் கலை

இன்று, கலை மற்றும் அறிவியல் சார்ந்த தொழில்நுட்பங்களில் ...

இன்று, கலை மற்றும் அறிவியல் சார்ந்த தொழில்நுட்பங்களில் உலகே வியந்து, நிமிர்ந்து பார்க்கும் சாதனைகளை உள்ளடக்கியதே தமிழர் கட்டிடக்கலை ஆகும். அக்காலத்தில் கட்டப்பட்டக் கோவில்களும், கோட்டைகளும், அணைகளும் தமிழர்களின் அறிவியல் நுட்பத்தையும், தொலைநோக்கும் திறத்தையும், கலை அறிவையும் பறைசாற்றுவதாக அமைந்துள்ளன. தமிழர் கட்டடக் கலையின் பாரம்பரியத்தை ஐந்து நிலைகளாகப் பிரிக்கலாம்.

  • பழைய காலம் : கி. பி. 500க்கு முற்பட்டது. மரம் செங்கற்களால் மட்டும் ஆன கோயில்கள்.
  • பல்லவர் காலம் : கி. பி. 600 - 900 பல்லவர் கற்றளிக் காலம்.
  • சோழர் காலம் : கி. பி. 900 - 1800 புதிய கற்றளிக் காலம். பழைய கற்றளிகளும் புதுப்பிக்கப்பட்ட காலம்.
  • பாண்டியர் காலம் : கி.பி. 1500-1800.
  • விஜயநகரக் காலம் : கி. பி. 1500-1700.

கி. பி. 500க்கு முற்பட்டக் காலத்தில் பெரும்பாலானக் கோயில்கள் முழுமையாக மரத்தினாலேயே கட்டப்பட்டன. மரக்கூரை மற்றும் தூண்கள் கெட்டுப் போகாத வண்ணம் செம்பிலும், தங்கத்திலும் தகடுகள் வேயப்பட்டன. பின்பு மரக்கோயில்கள் தீப்பற்றி அழிய நேருமென்று உணர்ந்ததும், செங்கல் (சுடுமண்) சுண்ணாம்பு (சுதை) கொண்டுக் கோவிலின் பெரும்பகுதியைக் கட்டி, உத்தரம், கதவு முதலியவற்றுக்கு மட்டும் மரங்களைப் பயன்படுத்தும் வழக்கம் ஏற்பட்டது. சங்க காலத்துத் தமிழ்க் கோயில்கள் இத்தகையவையேயாகும். எட்டுத் தொகையில் ஒன்றாகிய அகநானூற்றில் பெரும்புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடியுள்ள ஒரு பாடல் இதற்குச் சான்றாக அமையும்.

"இட்டிகை நெடுஞ்சுவர் விட்டம் வீழ்ந்தென
மணிப்புறாத் துறந்த மரஞ்சோர் மாடத்து
எழுதணி கடவுள் போகலிற் புல்லென்று
ஒழுகுபலி மறந்த மெழுகாப் புன்றிணை"

என்றப் பாடல் மூலம், அக்காலக் கோயில்கள் கட்டப்பட்ட விதத்தை அறிய முடிகிறது. மேலும், கடைச்சங்க காலத்தின் இறுதியில் வாழ்ந்த சோழன் செங்கணான் சிவபெருமானுக்கும் திருமாலுக்கும் எழுபதுக்கு மேற்பட்ட திருக்கோயில்களைச் செங்கல்லால் கட்டினான் என்பதை

"இருக்கிலங்கு திருமொழிவாய் எண்டோ ளீசற்கு
எழில்மாடம் எழுபதுசெய் துலகமாண்ட
திருக்குலத்து வளச் சோழன்"

என்றத் தேவாரப் பாடல் மூலம் அறிய முடிகிறது.

கி.பி. ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல்லவ மன்னன் மகேந்திர வர்மன் காலத்தில் கோயிற் கட்டடக் கலையில் புது மாறுதல் நிகழ்ந்தது. பெரியக் கற்பாறைகளைக் குடைந்து எழில் வாய்ந்த குகைக் கோயில்களை அமைக்கும் வழக்கம் ஏற்பட்டது. கற்பாறைகளைச் செதுக்கித் தூண்களையும் முன் மண்டபத்தையும், அதற்கு அப்பால் கருவறை எனப்படும் திருவுண்ணாழிகையையும் அமைக்கும் முறை உருவானது. மண்டகப்பட்டுக் குகைக்கோயிலில் உள்ள வடமொழிச் சாசனம் ஒன்று இவ்வாறு கட்டப்பட்ட முறையை உறுதி செய்கிறது.

"செங்கல், சுண்ணம், மரம், உலோகம் முதலியவை இல்லாமலே பிரம, ஈசுவர, விஷ்ணுக்களுக்கு விசித்திர சித்தன் (மகேந்திர வர்மனின் பெயர்) என்னும் அரசனால் இக்கோயில் அமைக்கப்பட்டது”

என்பதே சாசனத்தில் உள்ளச் செய்தியாகும். பல்லவ மன்னர்களான மாமல்லன் நரசிம்மப்பல்லவன், பரமேசுவரவர்மன், நந்தி வர்ம பல்லவன் முதலியவர்கள் மாமல்லபுரம் முதலிய இடங்களில் பாறைகளைக் குடைந்து குகைக்கோயில்களையும் தேர்க்கோயில்களையும் உருவாக்கினர். அந்தக் கோவில்களின் கலை நயத்தை இன்று உலகம் வியந்துக் கொண்டிருக்கிறது.

பாறைக்கோயில்களை அடுத்துக் கற்றளிகள் எனப்படும் கற்கோயில்களின் காலம் கி. பி. ஏழாம் நூற்றாண்டின் இறுதியில் அரசாண்ட இரண்டாம் நரசிம்மவர்மன் ஆகிய இராசசிம்ம பல்லவன் காலம் முதல் தொடங்கியது. நீளமாகவும், அகலமாகவும் தேவைக்கேற்பவும் தரித்து எடுத்த கருங்கற்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கிக் கட்டப்படும் கோயிலே கற்றளி. சுண்ணம் சேர்க்காமலே பெரும்பாலும் இவைக் கட்டப்பட்டன. மாமல்லபுரக் கடலோரமாக உள்ள கற்றளியும், காஞ்சியில் கைலாசநாதர் கோயில் என்று இப்போது கூறப்படும் இராசசிம்மேசரம் என்றக் கற்கோயிலுமே முதன்முதலில் கட்டப்பட்ட கற்றளிகளாகும்.

பின்னர், சோழமன்னர்கள் பற்பல செங்கல் தளிகளைக் கற்கோயில்களாக மாற்றிக் கட்டியதைக் கல்வெட்டுக்களில் இருந்தும் சாசனங்களில் இருந்தும் அறிய முடிகின்றது. பின்னாளில் கற்கோயில்கள் கட்டுவதே வழக்கமாயிற்று. திருவரங்கம், தில்லை, மதுரைக் கோயில்களின் பெரும்பகுதிகள் இத்தகைய கற்கோயில்களாகவே கட்டப்பட்டு, அர்த்த மண்டபம், மகாமண்டபம், ஆயிரங்கால் மண்டபம், கருவறை, திருச்சுற்றுக்கள் என்னும் அமைப்புடன் சிறப்பாக விளங்கி வருகின்றன. தமிழகக் கற்கோயில் சிற்பங்களில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடுகளாகட்டும், தூண்களாகட்டும், ஒரு நூல் இழை கூட கோணல் இல்லாமல் கட்டப்பட்ட ஆயிரங்கால் மண்டபங்களாகட்டும் இன்றும் அனைவரும் வியக்கும் வண்ணம் உள்ளன.

பிற்காலக் கட்டடங்களில் திருமலை நாயக்கர் மஹால், செட்டிநாடு வீடுகள், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் பகுதிகளில் உள்ளக் கோட்டைகள் ஆகியவை மிகவும் சிறந்தவை. முகலாயர்களின் வரவால் பிற்காலத் தமிழ் கட்டடக் கலையில் இஸ்லாமியப் பாணி மேலோங்கி இருக்கின்றது.

இன்று நாம் தொழில்நுட்பத்தில் நன்கு வளர்ந்து விட்டோம். ஆனால், தமிழர் கட்டியப் பழங்காலக் கோவில்களில் ஒன்றைக் கூட நம்மால் மறுபடி உருவாக்க முடியாது என்பது அனைவரும் ஒப்புக் கொள்ளும் கருத்து. இதுவே தமிழர் கட்டடக் கலையின் அற்புதத்தையும் உன்னதத்தையும் எடுத்துரைக்கிறது.

4
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu