தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்களுக்கு இலக்கு நிர்ணயம் செய்து போக்குவரத்து கழகம் உத்தரவிட்டு உள்ளது.
இலக்கு நிர்ணயம் குறித்து அனைத்து மண்டல மேலாளர்களுக்கு தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், 14வது ஊதிய பேச்சுவார்த்தையின் காரணமாகவும் , அகவிலைப்படி உயர்வு காரணமாகவும் மாதத்திற்கு 10 கோடி ரூபாய் தேவை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
மாதத்திற்கு 3.40 கோடி ரூபாய் பேருந்துகளில் விளம்பரங்கள் மூலமாக வருகிறது. மீதமுள்ள 6.60 கோடி ரூபாய் பயணிகளுக்கு வழங்கப்படும் டிக்கெட் மூலமாகவே வசூலிக்க வேண்டும். பேருந்துகளில் முழுமையான அளவு பயணிகளை ஏற்றிச் சென்று கட்டணங்களை வசூல் செய்து வருவாயை அதிகரிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வருவாயை அதிகரிக்கவும், நிதிச்சுமையை குறைக்கவும் போக்குவரத்து ஊழியர்களுக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனை அனைத்து மண்டல மேலாளர்களும் பின்பற்ற வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு டீசல் சிக்கனத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.