பிஸ்லெரி நிறுவனம், பேக் செய்யப்பட்ட குடிநீரை விற்பனை செய்கிறது. இந்த நிறுவனத்திற்கு, இந்தியாவில், 150 உற்பத்தி மையங்கள், 4000 க்கும் மேலான விநியோகஸ்தர்கள், 5000 வாகனங்கள் ஆகியவை உள்ளதாக கூறப்படுகிறது. இது ரமேஷ் சவுகானுக்கு சொந்தமான நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தின் பங்குகளை தற்போது டாடா குழுமம் வாங்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், பிஸ்லெரி தரப்பில் இருந்து எந்த விதமான அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை.
டாடா குழுமத்தின் கீழ் இயங்கும் டாடா கன்சியூமர்ஸ் வர்த்தகத்தில், ஸ்டார்பக்ஸ் உட்பட டெட்லி டி, 8 ஓ கிளாக் காபி, உப்பு உள்ளிட்ட பல நுகர்வோர் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும், டாடா கன்ஸ்யூமர்சுக்கு சொந்தமாக நரிஷ்கோ (Nourishco) என்ற பெயரில் பேக் செய்யப்பட்ட குடிநீரும் விற்பனை செய்யப்படுகிறது. எனினும், இந்தியாவில், குடிநீர் வர்த்தகத்தை அதிகப்படுத்த, மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ள பிஸ்லெரி நிறுவனத்தை கையகப்படுத்த டாடா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் கொக்கோ கோலாவின் கின்லே, பெப்சிகோவின் அக்வாபினா ஆகியவற்றுடன், பிஸ்லெரியின் குடிநீர் அதிகமான வர்த்தகத்தைக் கொண்டுள்ளது. எனவே, இந்த நிறுவனத்தின் பங்கு விற்பனை முக்கியமாகக் கருதப்படுகிறது.
முன்னதாக, ரமேஷ் சவுகான், “ஒருவேளை, நான் பிஸ்லெரியின் பங்குகளை விற்க விரும்பினால், அதனை இந்தியருக்குத்தான் விற்பேன்” என்று தெரிவித்திருந்தார். அந்த வகையில், பல்வேறு நுகர்வோர் பொருட்களை விற்பனை செய்யும் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் பிஸ்லெரியின் பங்குகளை வாங்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால், ரிலையன்ஸ் உடனான சமீபத்திய பேச்சு வார்த்தையில், பங்குகளை விற்பது குறித்த எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அதே வேளையில், ரமேஷ் சவுகான், பிஸ்லெரி நிறுவனத்தின் குளிர்பான வகைகளான தம்சப், லிம்கா, கோல்ட் ஸ்பாட் போன்றவற்றின் பங்குகளை ஏற்கனவே கொக்கோ கோலா நிறுவனத்திற்கு விற்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.