கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 5408 கோடியாக உயர்ந்துள்ளது. நிறுவனம் வெளியிட்டுள்ள நான்காம் காலாண்டு நிதிநிலை அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முந்தைய ஆண்டின் இதே காலாண்டில், 1033 கோடி மதிப்பில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நிகர இழப்பை பதிவு செய்திருந்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிறுவனத்தின் விலை சீர்திருத்த நடவடிக்கைகள், நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு உள்நாட்டில் அதிகரித்து வரும் தேவை ஆகியவை, லாப உயர்வுக்கு முக்கிய காரணங்களாக சொல்லப்பட்டுள்ளது. மேலும், விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட சிக்கல்களை குறைத்ததும் மற்றொரு காரணமாக கூறப்பட்டுள்ளது. அத்துடன், கடந்த ஏப்ரல் மாதத்தில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மொத்த வாகன விற்பனை 4% சரிவுடன், 69599 ஆக பதிவாகியுள்ளது.