உற்பத்தி பொருட்கள் விலை உயர்வால், பல்வேறு வாகன நிறுவனங்கள் விலை உயர்வை அறிவித்து வருகின்றன. அந்த வகையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது சரக்கு வாகன விலைகளை 3% உயர்த்துவதாக அறிவித்துள்ளது. வரும் ஜனவரி 1ம் தேதி முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வருவதாக தெரிவித்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சார்பில் டாடா ஏஸ், டாடா இன்ட்ரா, டாடா விங்கர் போன்ற சரக்கு வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வாகன விலைகளில் 3% உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் டாடா மோட்டார்ஸ் விற்பனையில் சரிவு காணப்பட்டுள்ள நிலையில், சரக்கு வாகன விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அத்துடன், கடந்த மாதத்தில் சரக்கு வாகன விற்பனை 4% சரிவடைந்த நிலையில், விலை உயர்வால் மேலும் சரிவுகள் ஏற்படலாம் என கருதப்படுகிறது.