டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரனுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியேர் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே வர்த்தக உறவை கட்டமைத்து வலுப்படுத்தியதற்கு, அதிக பங்களிப்பு வழங்கியதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. ஐரோப்பா மற்றும் வெளிநாட்டு விவகாரங்களுக்கான பிரான்ஸ் அமைச்சர் கேத்தரின் கொலோனா, இந்த விருதை அவருக்கு வழங்கியுள்ளார். இந்தியா பிரான்ஸ் வர்த்தக மற்றும் தொழில்துறை செயலாளர் பாயல் எஸ் கன்வார், டிவிட்டரில் இந்த செய்தியை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், பல்வேறு பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
என் சந்திரசேகரன், டாடா குழுமத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். குறிப்பாக, டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றிய வந்தார். கடந்த 2017 ஆம் ஆண்டு முதல், டாடா சன்ஸ் அமைப்பின் தலைவராக உள்ளார். அத்துடன், கடந்த 2016 முதல் 2022 வரை, மத்திய ரிசர்வ் வங்கியின் வாரியத்தில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் ஆவார்.