இந்தியாவின் குறைந்த விலை மின்சார வாகனமாக அறியப்படும் டாடா டியாகோவின் விலை, வரும் ஜனவரி மாதத்தில் 4% உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு காரின் விலையில் 30000 முதல் 35000 ரூபாய் வரை உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட டாடா டியாகோ மின்சார வாகனம், இந்தியச் சந்தையில், 8.49 லட்சம் முதல் 11.49 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும், முதல் 10000 வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த விலை வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது. ஆனால், 10000 வாடிக்கையாளர்கள் பதிவை கடந்துவிட்ட போதிலும், மின்சார வாகனத்தின் விலை உயர்த்தப்படவில்லை. மாறாக, 20000 வாடிக்கையாளர்கள் வரை இந்த அறிமுகச் சலுகை நீட்டிக்கப்பட்டது. தற்போது, இந்த அறிமுகச் சலுகை நீக்கப்பட்டு விலைகள் உயர்த்தப்படுகின்றன. அதுமட்டுமின்றி, உற்பத்தி செலவு அதிகரிப்பு, மூலப்பொருட்கள் விலை உயர்வு உள்ளிட்ட தொழில்நுட்ப காரணங்களாலும் வாகனத்தின் விலை உயர்த்தப்படுவதாக கூறப்படுகிறது.